Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை : ''தி.மு.க. அரசு கோயில்களை கொள்ளையடிக்க திட்டமிட்டு அதற்கான வேலையை துவங்கியுள்ளது'' என பா.ஜ. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார்.
கோவையில் நிருபர்களிடம் இவர் கூறியதாவது: தி.மு.க.விற்கு வாக்கு அளித்தவர்கள் ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். சமீபத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய முடியாத தி.மு.க. அரசு மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் விமர்சனம் செய்யும் எதிர் கட்சியினரை கைது செய்து வருகிறது. இதன் காரணமாகத்தான் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் 150க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. அத்தனையும் பட்டா நிலத்தில் இருந்தவை. தி.மு.க.வின் இந்து விரோத ஆட்சியால் மக்கள் கோவில்களுக்கு செல்ல முடியவில்லை. பக்தர்களை திருச்செந்துார் சூரசம்ஹார விழாவில் பங்கேற்க விடாமல் தடியடி நடத்தி உள்ளனர்.
தி.மு.க. அரசு கோவில்களை கொள்ளையடிக்க திட்டமிட்டு அதற்கான வேலையை துவங்கியுள்ளது. அதில் ஒன்றுதான் கோவில் நகைகளை உருக்கி 'பிஸ்கெட்' ஆக மாற்றும் நடவடிக்கை. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்.
பிரதமர் மோடி பிபின் ராவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து சமூக வலைதளங்களில் அவதுாறாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும். ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகளின் சொத்து விபரங்களை தலைமை செயலர் கேட்டிருப்பது வரவேற்கக்கூடியது. இவ்வாறு அவர் கூறினார்.